செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தரிடம் பணம் பறித்த கணவன்-மனைவி கைது
ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தரிடம் பணம் பறித்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் உள்ள கழிவறை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இளம் தம்பதியினர் பேச்சு கொடுத்துள்ளனர். திடீரென்று அவர்கள் ரமேசின் சட்டை பையில் இருந்த பணத்தினை எடுத்து தப்பியோட முயன்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். பின்னர் போலீசார் இளம்தம்பதியினரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து ரமேசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் இருவரும் கடலூர் மாவட்டம் முத்தாண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (24), அவரது மனைவி பொன்னி (23) என்பது தெரியவந்தது. 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.