செய்திகள்

சிவகாசியில் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவர் 2-ம் திருமணம் - பெண் புகார்

Published On 2018-12-19 10:50 GMT   |   Update On 2018-12-19 10:50 GMT
வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவர், 2-ம் திருமணம் செய்ததாக போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் புகார் கொடுத்துள்ளார்.
விருதுநகர்:

சிவகாசி அருகே உள்ள கோபிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாரிச்செல்வி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

எனக்கும், சிவகாசியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது 3ம் பவுன் நகையும், ரூ.10 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.

குழந்தை இல்லாததை காரணம் காட்டி, கூடுதலாக 10 பவுன் மற்றும் பணம் கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்தனர்.

இந்த நிலையில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் என்னையும், குழந்தையையும் ஏற்க கணவர் மாரிமுத்து மறுத்துவிட்டார். மேலும் அவர் சிவகாசி சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விவாகரத்து மனுவும் தள்ளுபடி ஆகிவிட்டது.

இந்த நிலையில் மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரை மாரிமுத்து 2-ம் திருமணம் செய்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவிட்டதை தொடர்ந்து சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து மாரிமுத்து, அவரது பெற்றோர் சுந்தரலிங்கம்-பாப்பா, சகோதரிகள் பொன்னுத்தாய், திலகராணி மற்றும் எலிசபெத்ராணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News