செய்திகள்
ஊத்தங்கரையில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைதானார்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி ரோட்டில் போலி டாக்டர் இருப்பதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் அசோக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அவர் கல்லாவி ரோடு பகுதிக்கு சென்று நேற்று திடீரென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பாச்சல் கிராமத்தை சேர்ந்த மணி (58) என்பவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
அவரை மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் அசோக்குமார் பிடித்து ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.