செய்திகள்

பாபநாசம் அருகே குடும்பத்தகராறில் பெண் அடித்துக் கொலை- 4 பேர் கைது

Published On 2018-12-12 10:39 GMT   |   Update On 2018-12-12 10:39 GMT
பாபநாசம் அருகே குடும்பத்தகராறில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

பாபநாசம்:

பாபநாசம் அருகே பண்டாரவாடை பார்வதிபுரம் அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோசப் மனைவி எலிசபெத்ராணி (வயது 51). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் எலிசபெத் ராணியின் அண்ணன் மைக்கேல் தாசுக்கும், எலிசபெத் ராணி குடும்பத்தினருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

கடந்த 7-ந் தேதி மைக்கேல்தாஸ், அவருடைய மனைவி ஜெயமேரி, மகன் பவுல்ராஜ், மகள்கள் ஜாய்ஸ்மேரி, கில்ட்டா மேரி ஆகிய 5 பேரும் எலிசபெத்ராணியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த எலிசபெத்ராணி கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

இதுகுறித்து எலிச பெத்ராணியின் மகன் செல்வமணி பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், உமாபதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்குபதிவு செய்து மைக்கேல்தாஸ், ஜெயமேரி, பவுல்ராஜ், ஜாய்ஸ்மேரி ஆகிய 4 பேரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராஜசேகர் அவர்கள் 4 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் தலைமறைவான கில்ட்டா மேரியை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News