காட்பாடியில் 35 பவுன் நகை கொள்ளை- வடமாநில கொள்ளை கும்பலை பிடிக்க 8 தனிப்படை தீவிரம்
வேலூர்:
காட்பாடி பர்னீஷ்புரம் மிஷின் காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் வில்லியம்ஸ். இவரது மனைவி இந்திராணி (80). இவரது மகள் நளினி (40). சி.எம்.சி.யில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்திராணி, நளினி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இரவு 2 மணிக்கு முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட வடமாநில கொள்ளை கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் 2 பேரையும் தனி அறையில் பூட்டி நாற்காலியில் கட்டிபோட்டு 35 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக நளினி காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்.பி. பிரவேஷ்குமார், டி.எஸ்.பி. லோகநாதன், இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் கொள்ளை நடந்த நேரத்தில் பதிவான செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை கும்பல் ஆந்திராவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.