செய்திகள் (Tamil News)

பொன்னமராவதி அருகே குளத்தில் மூழ்கி கோவில் குருக்கள் பலி

Published On 2018-12-07 17:10 GMT   |   Update On 2018-12-07 17:10 GMT
பொன்னமராவதி அருகே குளத்தில் மூழ்கி கோவில் குருக்கள் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னமராவதி:

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வலையப்பட்டி ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). கோவில் குருக்கள். இவர் அப்பகுதியில் உள்ள கோவிலில் பூஜைகள் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள குளத்தில் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் விக்னேஷ் (23) ஆகிய 2 பேரும் குளிக்க சென்றுள்ளனர். குளத்தில் குளித்தபோது 2 பேரும் தண்ணீருக்குள் திடீரென மூழ்கினர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபய குரல் எழுப்பினர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் குளத்தில் இறங்கி விக்னேசை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர். ஆனால் பிரகாசை வெகு நேரம் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் குளத்தில் நங்கூரம், கயிறு உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி பிரகாஷ் உடலை மீட்டனர். இதற்கிடையே போலீசார் பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரகாஷ் தந்தை கணேஷ் இறந்து 15 நாட்கள் ஆவதற்குள் பிரகாஷ் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News