திருத்துறைப்பூண்டி அருகே மின் இணைப்பு வழங்ககோரி பொதுமக்கள் மறியல்
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஏராளமான தென்னை மரங்கள், மின்கம்பங்கள் கஜா புயலில் சாய்ந்தன.
புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்தும், அடிப்படை வசதியான குடிநீர், உணவு, மின்சாரம் கேட்டும் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி ஊராட்சி, தோப்படித்தெருவில் உள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் திருத்துறைப்பூண்டியை அடுத்த பாமணி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி மின்வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.