செய்திகள்

கொல்லிமலை அருகே சொத்து தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன்

Published On 2018-12-03 11:55 GMT   |   Update On 2018-12-03 11:55 GMT
சொத்து தகராறு காரணமாக கொல்லிமலை அருகே தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள சோளக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 67), விவசாயி. இவரது மகன் ரவிச்சந்திரன் (38). லாரி டிரைவர்.

கடந்த 28-ந் தேதி இரவு தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ரவிச்சந்திரன் தனக்கு சொத்தில் பங்கு பிரித்து தரும்படி தந்தை ராமசாமியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். ஆனால் அதற்கு சொத்தில் தற்போது எந்தவித பங்கும் தர முடியாது என்று ராமசாமி கூறியதாக தெரிகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தந்தையின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டை உடைந்து ராமசாமிக்கு ரத்தம் கொட்டியது. வலியால் அலறி துடித்த அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ராமசாமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வாழவந்திநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து தந்தையை கொன்ற ரவிச்சந்திரனை கைது செய்தார்.

பின்னர் அவர் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மகனே தந்தையை அடித்து கொன்ற சம்பவம் வாழவந்திநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News