திருப்பூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை- ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை
திருப்பூர்:
திண்டுக்கல்லை சேர்ந்தவர் ரவி என்கிற ரவிச்சந்திரன் (வயது 54). இவர் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் தங்கியிருந்து சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார்.
கடந்த 28.9.2014 அன்று மதியம் ரவி, அப்பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவனை அழைத்து, ஆட்டோவில் ஜாலியாக சுற்றி வரலாம் என்று ஆசைகாட்டி ஆட்டோவில் அழைத்துச்சென்றார்.
அணைக்காடு பகுதிக்கு சென்ற பின்பு ஆட்டோவை நிறுத்தி விட்டு அந்த மாணவனை அங்குள்ள ஒரு கட்டிடத்துக்குள் அழைத்துச்சென்று அவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். அந்த நேரத்தில் மாணவனை தேடி வந்த தந்தை மற்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் சேர்ந்து ரவியை பிடித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ரவி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றத்துக்கு ரவிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும், மாணவனை ஏமாற்றி அழைத்துச்சென்று தகாத முறையில் நடந்த குற்றத்துக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்தும், இந்த தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்கவும் நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து ரவிச்சந்திரனை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.