செய்திகள்

பேராவூரணியில் குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2018-12-01 11:15 GMT   |   Update On 2018-12-01 11:15 GMT
பேராவூரணியில் குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேராவூரணி:

தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த பொன்காடு பகுதியில் குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வழங்காததால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.

இதுபற்றி பொதுமக்கள் புகார் கூறியதை தொடர்ந்து அங்கு இன்று மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று காலை குடிநீர் தொட்டிக்கு செல்லும் மின் இணைப்பை சரிசெய்ய யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேராவூரணி ஆதிமுத்து சரோஜா சினிமா தியேட்டர் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் உதவி செயற்பொறியாளர் ராதாகிஷ்ணன் பேராவூரணி இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து குடிநீர் தொட்டிக்கு மின்இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதைதொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News