மேட்டுப்பாளையம் அருகே 2 மளிகை கடையின் ஷட்டரை உடைத்து பணம் திருட்டு
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் மணி நகரை சேர்ந்தவர் முத்துச் செல்வன். இவர் தாசம்பாளையம் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு 11 மணிக்கு முத்துச்செல்வன் தம்பி முத்து கிருஷ்ணன் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி சென்றார். இன்று அதிகாலை 5 மணிக்கு பால்காரர் பால் கேனை வைக்க முத்துச்செல்வன் மளிகை கடைக்கு வந்தார்.
அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அவர் முத்துச் செல்வன் தந்தை தாமோதரனிடம் தெரிவித்தார்.
தாமோதரன் மற்றும் அவரது மகன்கள் கடைக்கு வந்து பார்த்தனர். அப்போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கடையில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 72 ஆயிரம் ரொக்க பணத்தை காணவில்லை.
மேலும் மளிகை பொருட்களும் திருட்டு போய் இருந்தது. பணத்தை திருடியவர்கள் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களையும் எடுத்து சென்று உள்ளனர்.
இதே போல் பாரி கம்பெனி ரோடு 9-வது வீதியில் தாசம் பாளையம் மண்டேலா நகரை சேர்ந்த ஜான்சன் என்பவர் நடத்தி வரும் மளிகை கடையின் ஷட்டரை உடைத்து அங்கிருந்த ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பணம், மற்றும் மளிகை பொருட்களையும் மர்ம நபர்கள் திருடி சென்ற விட்டனர்.
இந்த இரு திருட்டு குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் திருட்டு போன மளிகை கடைக்கு வந்து பார்வையிட்டனர். பணம், மளிகை பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.