செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

Published On 2018-11-30 10:07 GMT   |   Update On 2018-11-30 10:07 GMT
11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கிண்ணக்கொரையை சேர்ந்தவர் பிரதாப் என்கிற ஆப்பிள் (வயது 21). இவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 3-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை, அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இது பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் வீட்டுக்கு வந்த சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்து பெற்றோர் அவளிடம் காரணத்தை கேட்டுள்ளனர்.

அப்போது சிறுமி, தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுது உள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து மஞ்சூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனர்.

இந்த வழக்கு ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன் குற்றவாளி பிரதாப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மாலினி ஆஜராகி வாதிட்டார்.

Tags:    

Similar News