செய்திகள்

கஜா புயலால் படகுகள் சேதம் - காரைக்கால் மீனவர்கள் 17-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

Published On 2018-11-29 10:37 GMT   |   Update On 2018-11-29 10:37 GMT
கஜா புயலால் ஏராளமான பைபர் மற்றும் விசைப்படகுகள் சேதமடைந்ததால் இன்று 17-வது நாளாக காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
காரைக்கால்:

கஜா புயல் கடந்த 16-ந் தேதி வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் புதுவை மாநிலம் காரைக்காலில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

ஏராளமான பைபர் மற்றும் விசைப்படகுகள் சேதமடைந்தன. புயல் கரையை கடக்கும் முன்பே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்கால், பட்டினச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராம மீனவர்கள் கடந்த 13-ந் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கஜா புயல் கரையை கடந்து இயல்பு நிலை திரும்பிய பிறகும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். புயலால் சேதம் அடைந்த படகுகளுக்கு பதில் புதிய பைபர் படகுகள் வழங்க வேண்டும். இல்லையென்றால் படகுகளை முற்றிலும் சீரமைப்பதற்காக நிவாரண தொகையை முழு அளவில் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் புதுவை அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது சம்பந்தமாக நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமியை மீனவர்கள் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். இருப்பினும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் தொடர்ந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இன்று 17-வது நாளாக அவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இதனால் கடலூர், சிதம்பரம், மரக்காணம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காரைக்காலுக்கு மீன்கள் வருகின்றன. இதனால் காரைக்காலில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.


Tags:    

Similar News