செய்திகள்

கடைக்கு சென்ற பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது

Published On 2018-11-28 12:23 GMT   |   Update On 2018-11-28 12:23 GMT
மதுரை அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை மாவட்டம், துவரிமான் கீழத்தெருவைச் சேர்ந்தவர் நாகஜோதி. இவரது மனைவி முருகேஸ்வரி (28). வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய முருகேஸ்வரியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் முகவரி கேட்பது போல நடித்து அவர் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்தனர்.

அப்போது அவர் கூச்சலிட்டார். எனவே வழிப்பறி ஆசாமிகள் தப்ப முயன்றனர். பொதுமக்கள் விரட்டிச் சென்று 2 பேரையும் பிடித்து நாகமலை புதுக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் செக்கானூரணியைச் சேர்ந்த சிவ பிரகாஷ் (வயது 23), விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (24) என்பது தெரியவந்தது.

2 பேரையும் கைது செய்த போலீசார் வேறு எந்த சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை சமயநல்லூர் ஆர்.சி.தெருவைச் சேர்ந்தவர் பிரபு (38). இவர் சமயநல்லூர் மெயின்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி ரமேஷ் (28) என்பவர் டீக்கடைக்குள் புகுந்து பிரபுவிடம் குடிக்க பணம் கேட்டார்.

அவர் தர மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டியதுடன் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினார். பின்னர் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.1400 ரொக்கம் மற்றும் சைக்கிள் கடை அரவிந்த் என்பவரிடம் இருந்து ரூ.200 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார்.

இது குறித்து சமயநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News