செய்திகள்

லஞ்ச புகாரில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்- கமி‌ஷனர் நடவடிக்கை

Published On 2018-11-28 11:57 GMT   |   Update On 2018-11-28 11:57 GMT
திருப்பூரில் லஞ்ச புகாரில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்து கமி‌ஷனர் உத்தரவிட்டார்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர பகுதிகளில் மிக முக்கிய போலீஸ் நிலையங்களாக திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மாநகரின் முக்கிய பகுதிகள் அனைத்தும் இந்த போலீஸ் நிலையங்களின் கட்டுப்பாட்டிற்குள் வருவதால் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் குடும்ப பிரச்சினை, அடிதடி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக போலீஸ் நிலையங்களை நாடி வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருப்பூர் பகுதியை சேர்ந்த அக்பர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று புகார் கொடுக்க சென்றுள்ளார்.

வழக்கை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குபதிவு செய்யாமலேயே இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தன்னிடம் பணம் கேட்டு அலைக்கழிப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் மீது பாதிக்கப்பட்ட அக்பர், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஊரக போலீஸ் நிலையத்திற்கு பணிமாறுதலில் சென்றார்.

இதுபோல தொடர்ச்சியாக அவர் மீது புகார் எழுந்துள்ளன. இது குறித்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் விசாரணை நடத்தினார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவியை தர்மபுரி மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இது போன்று ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமி‌ஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #tamilnews
Tags:    

Similar News