செய்திகள்

கிராமப்புறங்களில் 45 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது- அமைச்சர் தங்கமணி

Published On 2018-11-27 09:21 GMT   |   Update On 2018-11-27 09:21 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் 45 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #GajaCyclone #MinisterThangamani
திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், ராஜேந்திர பாலாஜி, மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி மணிவாசன், மாவட்ட ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலினால் 1 லட்சத்து 58 ஆயிரத்து 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 199 நிவாரண முகாம்களில் 3 வேளை உணவு, உடை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மின்சாரத்தை பொறுத்த வரை திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மின்சார கட்டமைப்பு முழுமையாக பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 லட்சத்து 13 ஆயிரம் மின்கம்பங்களும், 201 துணை மின்நிலையங்களும், 841 மின்மாற்றிகளும் சேதமடைந்துள்ளது.

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 3,787 மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். சீரமைப்பு பணியில் 1,518 எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது.

மின் வினியோகத்தை பொறுத்தவரை திருவாரூர் நகராட்சியில் 100 சதவீதமும், மன்னார்குடி நகராட்சியில் 92.66 சதவீதமும், கூத்தாநல்லூர் நகராட்சியில் 92.42 சதவீதமும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 75.02 சதவீதமும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் 45 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சாரம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterThangamani
Tags:    

Similar News