செய்திகள்

பெரியகுளம் அருகே வாலிபரை கல்லால் தாக்கி கொன்ற கும்பல்

Published On 2018-11-26 11:31 GMT   |   Update On 2018-11-26 11:31 GMT
பெரியகுளத்தில் வாலிபரை கல்லால் தாக்கி கொன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பெருமாள் (வயது 25). நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் மகன் ஞானசேகரன் (19) என்பவர் காமராஜர் மகன் கார்த்திக் ராஜாவுடன் போதையில் தகராறு செய்து கொண்டு இருந்தார். இதை பார்த்த கருப்பையாவும், அவரது மனைவி பழனியம்மாளும் ஏன் தகராறு செய்கிறீர்கள்? என கேட்டு அவர்களை அங்கிருந்து செல்லுமாறு சத்தம் போட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஞானசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் ராஜபாண்டி (19) உள்பட 4 பேர் சேர்ந்து பழனியம்மாளை தென்னை மட்டையால் தாக்கினர்.

இதை பார்த்த பெருமாள் எனது அம்மாவை எதற்காக தாக்கினீர்கள்? என தட்டி கேட்டார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஞானசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து பெருமாள் தலையில் போட்டனர்.

படுகாயமடைந்த பெருமாள் பெரிய குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து கருப்பையா தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மதனகலா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஞானசேகரனை கைது செய்தனர்.

இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். தகராறை தட்டிக் கேட்ட சம்பவத்தில் வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டது பெரியகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News