சமயநல்லூரில் வெளிமாநில லாட்டரி விற்ற 3 பேர் கைது
மதுரை:
மதுரை மாவட்டம், சமயநல்லூர் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
அதன் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெண் உள்பட 4 பேர் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றனர். அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
இதனைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை யார் கொடுத்தனர்? என போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தபோது, 2 பேர் தப்பி ஓட முயன்றனர். இருப்பினும் போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
4 பேரிடம் இருந்து 19 ஆயிரத்து 570 வெளிமாநில லாட்டரிகள் மற்றும் ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 660 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் தர்மர் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக வாடிப்பட்டி கட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (வயது58), பரவையைச் சேர்ந்த பாண்டி (65), சேதுராமன் (50), அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் மகாலட்சுமி தவிர 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.