செய்திகள்
தண்டனை விபரத்தை கூறிவிட்டு நீதிபதி லிங்கேஸ்வரன் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த காட்சி.

சிறுமிக்கு பாலியல் தொல்லை- ஆஸ்பத்திரிக்கு சென்று முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி

Published On 2018-11-24 04:23 GMT   |   Update On 2018-11-24 04:23 GMT
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளியான முதியவர் மருத்துவமனையில் இருந்ததால், நீதிபதி அங்கு சென்று 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். #CuddaloreCourt
கடலூர்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேலபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 63). இவர் கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியில் புதிய வீடு கட்டினார்.

23.1.2017 அன்று அந்த வீட்டுக்கு 13 வயது சிறுமியை அழைத்துவந்து பாலியல் தொல்லை செய்தார். இது குறித்து வெளியே சொன்னால் அவரது தாய், தந்தையை கொலை செய்து விடுவதாக அந்த சிறுமியை மிரட்டினார். பின்னர் 3 மாதங்கள் கழித்து மீண்டும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சங்கர நாராயணனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்தது. அப்போது சங்கரநாராயணனை குற்றவாளி என நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்தார். இதைகேட்டதும் சங்கர நாராயணன் நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார்.

உடனே அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சங்கரநாராயணன் தனது உடல் நிலையை காரணம் காட்டி கோர்ட்டில் ஆஜராகவில்லை.

தண்டனை பெற்ற சங்கரநாராயணனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதையடுத்து நீதிபதி லிங்கேஸ்வரன் நேற்று மாலை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்றுவந்த சங்கரநாராயணனை சந்தித்து பாலியல் தொல்லைகொடுத்த வழக்கில் உங்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார். இது தொடர்பாக சங்கரநாராயணனிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு நீதிபதி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தீர்ப்பைகேட்டு சங்கரநாராயணன் மேலும் அதிர்ச்சி அடைந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து அரசு வக்கீல் செல்வப்பிரியா கூறும்போது, பாலியல் தொல்லை வழக்கில் சங்கர நாராயணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் ஆஸ்பத்திரிக்கு சென்று குற்றவாளிக்கு நீதிபதி தீர்ப்பு கூறியது இதுவே முதல் முறையாகும் என்று கூறினார்.  #CuddaloreCourt

Tags:    

Similar News