செய்திகள்
ஈஸ்வரி அம்மாள்

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தாயார் காலமானார்

Published On 2018-11-23 04:16 GMT   |   Update On 2018-11-23 04:16 GMT
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மறைந்த ஈஸ்வரி அம்மாளுக்கு அரசியல் கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளன. #Narayanasamy
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள். இவர் தனது கிராமமான பூரணாங்குப்பத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

96 வயதான அவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அரும்பார்த்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி அம்மாள் நேற்று இரவு மரணமடைந்தார்.

இதற்கிடையே கஜா புயல் நிவாரணம் நிதி பெற முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்றிருந்தார். தாயார் இறந்த செய்தி நாராயணசாமிக்கு தெரிவிக்கப்பட்டது.


இதனையடுத்து நாராயணசாமி டெல்லியில் இருந்து உடனடியாக புதுவை திரும்பினார். மறைந்த ஈஸ்வரி அம்மாளுக்கு புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

ஈஸ்வரி அம்மாளின் இறுதி சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் பூரணாங் குப்பம் இடுகாட்டில் நடக்கிறது.   #Narayanasamy
Tags:    

Similar News