செய்திகள்
போச்சம்பள்ளி அருகே விபத்து- தாய் பலி-மகள் கால்கள் முறிந்தது
போச்சம்பள்ளி அருகே வீட்டில் இருந்து கடைக்கு சென்ற தாய்- மகள் மீது கார் மோதியது. இதில் தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் மனைவி அலமேலு (வயது65).
இவரும் இவரது மகள் வைஜெயந்தியும் இன்று காலை வீட்டில் இருந்து கடைக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது போச்சம்பள்ளியில் இருந்து தருமபுரியை நோக்கி வந்த கார் அவர்கள் 2 பேர் மீதும் எதிர்பாராதவிதமாக மோதியது. பின்னர் அந்த கார் மின் கம்பத்தில் மோதி நின்றது.
இதில் 2 பேரையும் 500 மீட்டர் தூரத்திற்கு கார் இழுத்து சென்றது. அலமேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வைஜெயந்தியின் 2 கால்களும் முறிந்தன. அவர் படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அந்த வழியாக வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்த விபத்து குறித்து பாரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.