செய்திகள்
கர்நாடகாவில் இருந்து ஸ்கூட்டரில் மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த வடமாநில வாலிபர் பிடிபட்டார்
ஓசூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகாவில் இருந்து ஸ்கூட்டரில் மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த வடமாநில வாலிபரை கைது செய்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - மத்திகிரி கூட்டு ரோடு அருகே, மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில், போலீசார் மடக்கினார்கள்.
பின்னர் அந்த வாலிபரை விசாரணை செய்து, வண்டியை சோதனையிட்டபோது, கர்நாடக மாநிலத்திலிருந்து மது பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரீதம் சவுத்ரி(22) என்ற அந்த வாலிபரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 249 மது பாக்கெட்டுகள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.