செய்திகள்

திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் தாயுடன் தீக்குளிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் மனைவி

Published On 2018-11-19 12:28 GMT   |   Update On 2018-11-19 12:28 GMT
திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் தாயுடன் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து மனுக்கள் அளிக்க ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது 2 பெண்கள் திடீரென தங்கள் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைக்க முயன்றனர். இதை பார்த்ததும் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அந்த பெண் கூறியதாவது:-

செம்பட்டி அருகே உள்ள பிரணவபட்டியைச் சேர்ந்த எனது பெயர் சாந்தி (வயது 35). எனது கணவர் செல்லபாண்டி போடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். எனக்கு சொந்தமான பூர்வீக நிலம் 1½ ஏக்கர் கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை பழனிச்சாமி என்பவர் அபகரித்துக் கொண்டு என்னையும், எனது தாயார் பாக்கியலெட்சுமி (58) என்பவரையும் உள்ளே விட மறுக்கிறார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முடிவு செய்தோம். அதன்படி நானும் எனது தாய் பாக்கிய லெட்சுமியும் தீக்குளிக்க வந்தோம் என்றார்.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்குள் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை அளித்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News