செய்திகள்

பாரிமுனை குறளகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை- ரூ.2½ லட்சம் சிக்கியது

Published On 2018-11-15 06:45 GMT   |   Update On 2018-11-15 06:45 GMT
பாரிமுனையில் உள்ள குறளகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் பேரூராட்சி இயக்குனரக அலுவலகத்தில் ரூ.2½ லட்சம் சிக்கியது. #kuralagam
சென்னை:

தீபாவளியையொட்டி மாநில அரசு அலுவலகங்களில் பரிசு பொருட்களும், லஞ்ச பணமும் கைமாறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து தீபாவளிக்கு முன்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1 கோடி அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பரிசு பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாரிமுனையில் உள்ள குறளகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். குறளகம் கட்டிடத்தில் காதி கிராப்ட் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கட்டிடத்தின் 4-வது மாடியில் பேரூராட்சி இயக்குனரக அலுவலகம் உள்ளது.

அங்கு சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்தனர்.

இந்த சோதனையில் ரூ.2½ லட்சம் கணக்கில் வராத பணம் பிடிபட்டது. நள்ளிரவு வரையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டன.

பாரிமுனை சந்திப்பில் உள்ள குறளகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் அங்கு எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். ஒருசில அரசு அலுவலகங்களில் இரவு 8 மணிக்கு பிறகும் பணிகள் நடைபெறுவதுண்டு. இதுபோன்ற ஒரு சூழலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை குறளகத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #kuralagam
Tags:    

Similar News