செய்திகள்

வியாசர்பாடி-பெரம்பூரில் 2 வாலிபர்கள் மர்ம மரணம்: கொலையா? என போலீஸ் விசாரணை

Published On 2018-11-07 15:54 IST   |   Update On 2018-11-07 15:54:00 IST
வியாசர்பாடி, பெரம்பூர் பகுதியில் ஒரே நாளில் 2 வாலிபர்கள் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பூர்:

வியாசர்பாடி சர்மாநகர் அருகே தொழிற்பேட்டை உள்ளது.

இங்குள்ள அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை முன்பு உள்ள மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்குவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி லட்சுமி அங்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். போலீசார் பிணத்தை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து தொங்க விடப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரம்பூர் டி.டி.தோட்டம் 2-வது தெரு- பேப்பர் மில் ரோடு சந்திப்பில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் உடலில் காயங்கள் இருந்தன.

தகவல் அறிந்ததும் திரு.வி.க.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். வாலிபரின் உடல் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவர் யார்? அவர் இறந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News