செய்திகள்

கடலூரில் ஹவாலா பணத்தை மறைத்து வைத்த 3 ஏட்டுகள் டிஸ்மிஸ்

Published On 2018-11-05 10:09 GMT   |   Update On 2018-11-05 10:09 GMT
கடலூரில் வாகன சோதனையின் போது கைப்பற்றிய ஹாவாலா பணத்தை மறைத்து வைத்த 3 ஏட்டுகளை டிஸ்மிஸ் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடலூர்:

கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் கடந்த ஆண்டு வேப்பூர் போலீஸ் நிலைய ஏட்டு ரவிக்குமார், கம்மாபுரம் போலீஸ் நிலைய ஏட்டு செல்வராஜ், சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலைய ஏட்டு அந்தோணிசாமிநாதன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி பஸ்சை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த பஸ்சில் வந்த ஒருவர், கொண்டு வந்திருந்த பையில் ரூ.50 லட்சம் ஹவாலா பணம் இருந்தது.

ஆனால் அந்த பணத்தை கைப்பற்றிய போலீஸ் ஏட்டுகள் 3 பேரும் ரூ.20 லட்சத்தை எடுத்து அங்குள்ள புதரில் மறைத்து வைத்தனர். மீதி பணத்தை மட்டும் கடலூர் புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக பணத்தின் உரிமையாளர் புகார் செய்தார். இதையடுத்து புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பணம் மீட்கப்பட்டது. பணத்தை மறைத்து வைத்தது தொடர்பாக போலீஸ் ஏட்டு ரவிக்குமார் உள்பட 3 பேர் மீதும் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடந்தது. இதில் 3 ஏட்டுகளும் கூட்டாக சேர்ந்து பணத்தை எடுத்து மறைத்து வைத்தது உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர்கள் 3 பேரையும் டிஸ்மிஸ் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நடவடிக்கை எடுத்துள்ளார். #tamilnews
Tags:    

Similar News