செய்திகள்

பொன்னேரி அருகே அடகு கடையை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2018-11-05 06:56 GMT   |   Update On 2018-11-05 06:56 GMT
பொன்னேரி அருகே அடகு கடையை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அடகு கடை நடத்தி வருகிறார். இந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இங்கு நகைகளை அடகு வைத்துள்ளனர்.

நேற்று இரவு சந்தோஷ் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். கடை முன்பு கண்காணிப்பு கேமராவும் பொருத்தி இருந்தார்.

இரவு 12.30 மணியளவில் இந்த கடைக்கு வந்த ஒரு கொள்ளை கும்பல், முதலில் கண்காணிப்பு கேமராவை உடைத்து எறிந்தது. ‌ஷட்டரில் உள்ள பூட்டுகளை உடைத்து விட்டு கிரில் கதவை திறக்க முயன்றனர்.

அப்போது சத்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டில் இருந்தவர் வெளியே எட்டிப்பார்த்தார். யார் அது என்று குரல் கொடுத்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அங்கு வந்தனர்.

இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுபற்றி அடகு கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் வந்தார். கடைக்குள் கொள்ளையர்கள் நுழைவதற்குள் பக்கத்து வீட்டுக்காரர் பார்த்ததால் கொள்ளையர்கள் ஓடி விட்டனர்.

இதனால் அடகு கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் தப்பின.இதுகுறித்து பொன்னேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பொன்னேரியை அடுத்த வெண்பாக்கத்தில் தையல் கடை வைத்திருப்பவர் மனோ. நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

இன்று காலை கடையின் ‌ஷட்டர் திறந்து கிடந்தது. இது பற்றிய தகவல் அறிந்ததும் கடைக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம், செட்ஆப் பாக்ஸ், ஆதார் அட்டை ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுபற்றி பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

இரண்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தப்பி ஓடிய கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News