செய்திகள்

வாழப்பாடியில் குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து திமுக வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-11-03 11:17 GMT   |   Update On 2018-11-03 11:17 GMT
வாழப்பாடியில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரி, தொழில்வரி உயர்த்தியதை கண்டித்தும், தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #dmkdemonstration

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்கு மேட்டூர் காவிரி நதிநீரையே நம்பியுள்ளனர். மாதத்திற்கு இரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேட்டூர் காவிரி குடிநீருக்கு மாதந்திர குடிநீர் கட்டணமாக ரூ.72 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து ரூ.152 ஆக குடிநிர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சொத்து வரி, தொழில்வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.

வாழப்பாடி பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரி, தொழில்வரி உயர்த்தியதை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டணத்தை ரத்து செய்யவும், தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், வாழப்பாடியில் தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்காடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார். வாழப்பாடி ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, நகர செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிர்வாகிகள் சந்திரா ராயர், கலைசெல்வி மாதேஸ்வரன், அழகரசன், தும்பல்கணேஷ், உமாபதி, குறிச்சி பெரியசாமி, ஆட்டோ சுரேஷ், தனசேகரன், மணி மற்றும் விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர்கள் முல்லை வாணன், வேல்முருகன் மற்றும் காலிக்குடங்களுடன் திரண்டு வந்த ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.

வாழப்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி, காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். #dmkdemonstration

Tags:    

Similar News