செய்திகள்

சுற்றுச்சூழலை வலியுறுத்தி இளைஞர்கள் விழிப்புணர்வு பிரசாரம்

Published On 2018-11-01 17:24 GMT   |   Update On 2018-11-01 17:24 GMT
சுற்றுச் சூழலை வலியுறுத்தி இளைஞர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
மானாமதுரை:

மும்பையை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து சைக்கிள் கிளப் ஆரம்பித்து பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலத்திற்கு சைக்கிளில் சென்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதையடுத்து இந்த ஆண்டு அந்த இளைஞர்கள் சார்பில் மும்பையில் இருந்து ராமேசுவரத்திற்கு சுற்றுச்சூழலின் அவசியம் குறித்தும், அவற்றை பாதுகாப்பது நமது கடமை என்றும் வலியுறுத்தி சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து ஜூடு டிசைசா என்பவர் தலைமையில் 5 இளைஞர்கள் கடந்த மாதம் 19-ந் தேதி மும்பையில் இருந்து புறப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் கர்நாடக மாநிலம் வழியாக தமிழகம் வந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு திரு ப்புவனம் வழியாக மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலை மானாமதுரை மார்க்கமாக ராமேசுவரம் சென்றனர்.

மானாமதுரையில் இளைஞர்கள் கூறியதாவது:- அதிகரித்து வரும் மோட்டார் வாகனங்களால் தற்போது காற்று மாசுபட்டு வருகிறது. மும்பை நகரில் ஏற்பட்ட அதிகஅளவு மாசு காரணமாக அப்பகுதி மக்கள் தற்போது அதிகஅளவில் சைக்கிளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த உலகில் பிறந்த மக்கள் அனைவரும் தங்களது குடும்பத்தை நேசிப்பது போல் இயற்கையையும், சுற்றுச்சூழலையும் நேசிக்க வேண்டும். இதை வலியுறுத்தி நாங்கள் இந்த பிரசார பயணத்தை தொடங்கி உள்ளோம்.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் நாங்கள் இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளோம். காற்று மாசுவை கட்டுப்படுத்த இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள இளைஞர்களும் எங்களைப் போல் இதுபோன்ற விழிப்புணர்வு பிரசாரத்தை மக்களிடையே உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எங்க ளது விழிப்புணர்வு பிரசாரத்தை ராமேசுவரத்தில் முடித்து விட்டு மீண்டும் சைக்கிளில் மும்பை செல்ல திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மும்பையில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட அவர்கள் இதுவரை 1,746 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளனர்.
Tags:    

Similar News