செய்திகள்

திருவள்ளூரில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக மறியல்

Published On 2018-10-30 09:11 GMT   |   Update On 2018-10-30 09:11 GMT
திருவள்ளூரில் இன்று காலை சத்துணவு ஊழியர்கள் மீண்டும் 2-வது நாளாக மறியல் செய்தனர். #Nutritionstaff #Nutritionstaffstruggle

திருவள்ளூர்:

சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு கடந்த வியாழக் கிழமை முதல் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முதல் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலை அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் 2-வது நாளாக மறியல் செய்தனர். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதில் மாவட்டத் தலைவர் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைமணி, மாநிலத் தலைவர் சுந்தரம்மாள், மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், மாநிலச் செயலாளர் ஆண்டாள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலாளர் காந்திமதிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #Nutritionstaff #Nutritionstaffstruggle

Tags:    

Similar News