செய்திகள்

நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடிய வாலிபர் மர்ம மரணம்- போலீசார் தீவிர விசாரணை

Published On 2018-10-29 16:33 GMT   |   Update On 2018-10-29 16:33 GMT
சூலூர் அருகே நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடிய வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மாடியில் இருந்து தள்ளி கொலையா? செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சூலூர்:

தர்மபுரியை சேர்ந்தவர் அன்பரசு (27). இவர் கோவை புதூரில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர்கள் பாலா, ஜீவா ஆகியோர் சூலூர் பஸ் நிலையம் அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கருமத்தம் பட்டியில் வேலை பார்த்து வருகிறார்கள்.

இவர்களுடன் கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் அதே காம்பவுண்டில் தங்கி உள்ளனர்.

இவர்கள் அனைவரும் பார்ட்டி வைத்தனர். இதற்காக அன்பரசுவையும் அழைத்து இருந்தனர். அவரும் சென்று இருந்தார். நேற்று இரவு அவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.

திடீரென வாலிபர் அன்பரசு மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று அன்பரசு உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அன்பரசு மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை நண்பர்கள் யாராவது மாடியில் இருந்து தள்ளி விட்டு கொன்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News