செய்திகள்

மானாமதுரை அருகே டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2018-10-27 17:18 GMT   |   Update On 2018-10-27 17:18 GMT
கானாடுகாத்தான், மானாமதுரை, சிங்கம்புணரி, திருப்புவனம் பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
மானாமதுரை:

மானாமதுரை பேரூராட்சியில் ஒ.வெ.செ. மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கி பார்த்திபனூர் ரஸ்தா, கடைவீதி, அண்ணாசிலை வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், மகளிர்சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் டெங்கு, சிக்குன்குனியா நோய்கள் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய விழிப்புணர்வு குறித்து ஆட்டோ, மைக்செட் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. பேரூராட்சி பரப்புரையாளர்கள் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். முன்னதாக ஊர்வலத்தை மானாமதுரை தாசில்தார் யாஸ்மின் சகர்பான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜான்முகமது, துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், துப்புரவு மேற்பார்வையாளர்கள் பாலசுப்பிரமணியன், குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

கானாடுகாத்தான் பேரூராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எம்.சிடி.எம். மேல்நிலைப் பள்ளி மற்றும் சிவி.சிடி.வி. மீனாட்சி ஆச்சி மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள் துண்டு பிரசுரங்கள் கொடுத்தும், பேரூராட்சிகள் மூலம் வாகன விளம்பரம் செய்து பொது மக்களிடம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வெளிநாட்டினர் கலந்து கொண்டனர்.

சிங்கம்புணரி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் சிங்கம்புணரி தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் இருந்து திண்டுக்கல் சாலை வழியாக சிங்கம்புணரி பஸ் நிலையம் வந்து மீண்டும் பள்ளிக்கு ஊர்வலம் வந்தனர். சிங்கம்புணரி தேர்வு நிலைப் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், இளநிலை உதவியாளர் ஹபீப் ராஜா ஆகியோர் ஊர்வலத்தை தொடக்கி வைத்தனர். பேரூராட்சி அதிகாரி சேரல தரன், துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், துணை மேற்பார்வையாளர் தென்னரசு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தினகரன் ஆய்வாளர்கள் மதியரசன், எழில்மாறன், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி துணை தலைமை ஆசிரியர் அன்பு உள்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா கலந்து கொண்டார்.

திருப்புவனம் யூனியனை சேர்ந்த மடப்புரத்தில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் டெங்கு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் யூனியன் ஆணையாளர் முத்துக்குமார், மேலாளர் சுகுமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு, அரசு ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், ஊராட்சி எழுத்தர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல திருப்புவனம் யூனியனை சேர்ந்த 45 ஊராட்சிகளிலும் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ஜஹாங்கீர் உள்பட அலுவலகப்பணியாளர்கள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News