நடுரோட்டில் பேனர் விவகாரம்: கோவை கலெக்டருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
சென்னை:
கோவை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 3-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. அப்போது மாநகரம் முழுவதும் சாலைகளில் குழி தோண்டி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன.
சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த என்ஜினீயர் ரகு என்பவர், இந்த பேனரில் மோதி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்தி, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சாலைகளின் குறுக்கே பேனர்கள் வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை முறையாக அமல்படுத்த வில்லை என்று தலைமை செயலாளர், கோவை மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு எதிராக எம்.எல்.ஏ. கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, எம்.சுந்தர் ஆகியோர், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு குறித்து தலைமை செயலாளர், கோவை மாவட்ட கலெக்டர் ஆகியோர் விரிவான பதிலை 2 வாரத்துக்குள் அளிக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். #chennaihighcourt