மலேசிய விமானத்தில் வந்த 2 பயணிகளிடம் ரூ.36 லட்சம் தங்கம் பறிமுதல்
ஆலந்தூர்:
மலேசியாவில் இருந்து நேற்று இரவு 11.45 மணிக்கு ஒரு விமானம் சென்னை வந்தது.
இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சென்னை விமானநிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது காசிம்(30), இஸ்மாயில் (35) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
எனவே 2 பேரையும் தனியாக அழைத்துச் சென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களுடைய சூட்கேஸ்களும் சோதனை செய்யப்பட்டன.
அப்போது சூட்கேசில் இருந்த எமர்ஜென்சி விளக்கை திறந்து பார்த்தனர். அதில் ஒரு கிலோ 200 கிராம் எடைகொண்ட தங்க கட்டிகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.36 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று அதிகாலை சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது (34) என்பவரின் சூட்கேசை சந்தேகத்தில் திறந்து பார்த்தனர்.
அதில் இருந்த ரகசிய அறையில் அமெரிக்க, யூரோப் டாலர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.18 லட்சத்து 50 ஆயிரம். இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.