செய்திகள்

தருமபுரி பகுதிகளில் நலத்திட்ட உதவிகள், புதிய வாகனம்- கே.பி. அன்பழகன் தொடங்கி வைத்தார்

Published On 2018-10-17 15:31 GMT   |   Update On 2018-10-17 15:31 GMT
தருமபுரி பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய வாகனத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம்,  காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், ரூ.31.76 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தார்சாலை மேம்பாட்டு பணிகளுக்கு பூமிபூஜை மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் புதிய வாகனத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழாவிற்கு தருமபுரி சப்-கலெக்டர் சிவன் அருள், தலைமை வகித்தார். இதில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தருமபுரி மாவட்டம்,  காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பைசுஅள்ளி ஊராட்சி சாமியார் கொட்டாயில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.8.20 லட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி, ஒன்றியப் பொது நிதியிலிருந்து பைசுஅள்ளி முதல் குண்டலஅள்ளி வரை 0.550 கி.மீ தொலைவிற்கு ரூ.9.41 லட்சம் மதிப்பில் தார்சாலை மேம்பாட்டு பணிகள், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கெண்டிகானஅள்ளி ஊராட்சியில் புலிக்கரை - முக்குளம் சாலை முதல் நடேசன்கொட்டாய் வரை 1.070 கி.மீ. தொலைவிற்கு ரூ.14.15 லட்சம் மதிப்பில் தார்சாலை மேம்பாடு பணிகள் போன்ற புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் 6 மாதகாலத்திற்குள் நிறைவுபெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் மாரண்ட அள்ளி பேரூராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பிலான புதிய வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், சாமியார் கொட்டாய் கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு மற்றும் பைப்லைன் அமைத்தல் ஆகிய பணிகள் துவங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

விழாவில் முன்னாள் நகர மன்ற தலைவர் வெற்றிவேல், வட்டாட்சியர் கேசவமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், வெங்கடரமணன், உதவி செயற்பொறியாளர் மோகன், பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) ஆயிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News