ஈரோடு அருகே வாய்தகராறில் கூலி தொழிலாளிக்கு சரமாரி கத்திக்குத்து
ஈரோடு:
ஈரோடு அடுத்த ஓடப்பாளையத்தை சேர்ந்தவர் காஜா முகைதீன் (வயது 24) கூலித் தொழிலாளி.
இரவு நேரத்தில் அந்தபகுதியில் உள்ள மதுகடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஜீவானந்தம் நகரை சேர்ந்த பெயிண்டர் ரவீந்திரன்(வயது 33) என்பவரும் வந்தார்.
அப்போது இருவருக்கும் இடையே திடீர் தகராறு ஏற்பட்டது. இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டனர்.
தகராறு முடிந்து காஜா முகைதீன் தனது வீட்டுக்கு போய்விட்டார் எனினும் அவரை தொடர்ந்து ரவீந்தரனும் சென்றார். மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவீந்திரன், அவரை சரமாரியாக கத்தியால் குத்தினாராம். இதில் காஜா முகைதீனுக்கு கை, தொடை பகுதியில் கத்தி குத்துகள் விழுந்தது. ரத்தக் காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி ரவீந்தரனை கைது செய்தனர்.