தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் குத்திக்கொலை: தேடப்பட்ட விவசாயி போலீசில் சரண்
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள கூலிக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 53).
விவசாயியான இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் விவசாய அணி ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த விவசாயியான கிருஷ்ணன்(55). என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் கிருஷ்ணன், தனது மனைவி ராணியுடன் தனது நிலத்திற்கு சென்றார். அப்போது வீட்டுக்கு அருகில் இருந்த துரைசாமி மற்றும் அவருடைய மனைவி முத்து ஆகிய 2 பேரும், தங்களது நிலத்தில் உள்ள பாதையில் செல்லக்கூடாது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. உடனே துரைசாமி வீட்டுக்கு அருகில் கிடந்த தடியால் கிருஷ்ணனை தாக்கினார்.
அப்போது ஆத்திரமடைந்த கிருஷ்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் துரைசாமியின் மார்பில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து துரைசாமியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது துரைசாமி வழியிலேயே இறந்து விட்டது தெரிவித்தனர்.
இதுகுறித்து இண்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது துரைசாமியின் உறவினர்கள் நிலத்தகராறு காரணமாக துரைசாமியை பக்கத்து நிலத்துக்காரர் கிருஷ்ணன் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். என்பது தெரியவந்தது. உடனே போலீசார் துரைசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் துரைசாமியின் உறவினர்களும், தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசார் சமாதானம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் கொலையாளி கிருஷ்ணனை விரைவில் கைது செய்து விடுவதாக கூறினர். இதையடுத்து அவர்கள் துரைசாமி உடலை பெற்று கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கிருஷ்ணனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தேடப்பட்டு வந்த கிருஷ்ணன் நேற்று இண்டூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.