செய்திகள்

புதுக்கோட்டை சிறையில் போலீசார் அதிரடி சோதனை - கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

Published On 2018-10-13 04:55 GMT   |   Update On 2018-10-13 04:55 GMT
புதுக்கோட்டை சிறையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து புழல் சிறையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் சிறைகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இன்று காலை டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது.

புதுக்கோட்டை மாவட்ட சிறையில் 50க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் உள்ளனர். சிறுவர் சீர் திருத்த பள்ளியில் 25க்கும் மேற்பட்ட தண்டனை மட்டும் விசாரணைக்கு உட்பட்ட சிறுவர்கள் உள்ளனர்.

போலீசார் கைதிகளின் ஒவ்வொரு அறையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சில அறைகளில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சிறை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி கூறும் போது, இது வழக்கமான சோதனை, எந்தவித பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றார்.

Tags:    

Similar News