செய்திகள்

கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு- பூண்டி ஏரியில் கலெக்டர் ஆய்வு

Published On 2018-10-08 11:29 GMT   |   Update On 2018-10-08 11:29 GMT
பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கிருஷ்ணா நதி கால்வாயில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஊத்துக்கோட்டை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி. ஏரிக்கு கடந்த 29-ந் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தொடக்கத்தில் வினாடிக்கு 70 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 706 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடும் மதகுகளை பார்வையிட்டார். பின்னர் கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியில் வந்து சேரும் பகுதிக்கு சென்றார்.

அப்போது கலெக்டர் மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-

கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கிருஷ்ணா நதி கால்வாயில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

தாமரைகுப்பம் ‘ஜீரோ’ பாயின்டிலிருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள கிருஷ்ணா நதி கால்வாயில் பொது மக்கள் யாரும் குளிக்காமலும், துணி துவைக்காமலும் தடுக்க அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

மேலும் கால்வாய் நெடுகிலும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தடையை மீறி கால்வாயில் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி கூறினார்.

பின்னர் அவர் பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் பேபி கால்வாய், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் இணைப்பு கால்வாயை பார்வையிட்டார்.

அப்போது அவருடன் திருவள்ளூர் தாசில்தார் தமிழ்செல்வன், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் ரமேஷ், பொறியாளர் சந்திரகுமார் உடன் இருந்தனர். #tamilnews
Tags:    

Similar News