செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

Published On 2018-10-07 17:43 GMT   |   Update On 2018-10-07 17:43 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நாளை தொடங்குகிறது.
பெரம்பலூர்:

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் பெரம்பலூர் ஒன்றியத்தில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இதேபோல் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் ஒன்றியத்தில் வருகிற 11-ந்தேதி பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் ஒன்றியத்தில் வருகிற 12-ந்தேதி வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இந்த மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்களாக எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், கண் மருத்துவர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து தேர்வு செய்ய உள்ளனர்.

எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை நகல் அல்லது புதிய குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஊனம் தெரியும்படியான பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4 ஆகியவற்றுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News