செய்திகள்

கொருக்குப்பேட்டையில் சோப்பு கம்பெனியில் ரூ.6½ லட்சம் கொள்ளை

Published On 2018-10-07 11:28 GMT   |   Update On 2018-10-07 11:28 GMT
கொருக்குப்பேட்டையில் சோப்பு கம்பெனியில் ரூ.6½ லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

கொருக்குப்பேட்டை, கார்நேசன் நகரை சேர்ந்தவர் செல்வம். அதே பகுதியில் சோப்பு தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் கம்பெனியை பூட்டிச் சென்றனர். நேற்று மதியம் செல்வம் கம்பெனிக்கு வந்தார்.

அப்போது கம்பெனியின் மேற்கூரை ஆஸ்பெஸ்டா ஷீட் உடைந்து கிடந்தன. கல்லாப் பெட்டியில் இருந்த ரூ. 6½ லட்சம் மாயமாகி இருந்தது. மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராக்களை சேதப்படுத்தி அதன் பதிவு கருவியையும் கொள்ளை கும்பல் எடுத்து சென்று விட்டனர்.

அருகில் உள்ள கட்டிடத்தின் வழியாக ஏறிக்குதித்து கொள்ளை கும்பல்  கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. இது குறித்து ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News