ஈரோட்டில் அரசு பஸ் மோதி மில் தொழிலாளி பலி
ஈரோடு:
ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம்(வயது 24). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.
சண்முகம் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
திருநகர் காலனி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக சண்முகம் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சண்முகம் மோட்டார் சைக்கிள் நொறுங்கியது. பலத்த காயம் அடைந்த சண்முகம் உயிருக்கு போராடினார்.
இது குறித்து கருங்கல் பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சண்முகம் நள்ளிரவு 1.30 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.