செய்திகள்

2000 ரூபாய் செல்லாது திண்டுக்கல்லில் வாட்ஸ்அப் வைரலால் பரபரப்பு

Published On 2018-10-04 11:31 GMT   |   Update On 2018-10-04 11:31 GMT
ரூ.2000 நோட்டு செல்லாது என திண்டுக்கல்லில் பரவி வரும் வாட்ஸ்அப் செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
குள்ளனம்பட்டி:

பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். அதற்கு மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

இதனால் பழைய நோட்டுகளை மாற்று வதற்காக பொதுமக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள். அப்போதும் சிலர் 10 ரூபாய் நாணயம், 5 ரூபாய் நோட்டு செல்லாது என வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பினர்.

அதன் பின்பு வங்கி அதிகாரிகள் விளக்கமளித்த போதும் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று வரை 10 ரூபாய் நாணயங்களை பொதுமக்களும், வியாபாரிகளும் வாங்க மறுத்து வருகின்றனர்.

தற்போது வாட்ஸ்அப்பில் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் புதிய 1000 ரூபாய் நோட்டை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது எனவும் அதன் பின்பு 10 நாட்களுக்குள் தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டை மாற்ற வேண்டும். இல்லை என்றால் அதன் பின்பு அந்த நோட்டுகள் செல்லாததாகி விடும் என பரபரப்பாக தகவல் பரவி வருகிறது.

இதை பார்க்கும் பொது மக்கள் அதிர்ச்சியடைந்து வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவது குறித்து எந்த சுற்றறிக்கையும் வரவில்லை. எனவே இது பொய்யான தகவல் ஆகும். இது போன்ற வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் ரூ.2000 நோட்டை தாராளமாக பயன்படுத்தலாம் என்றனர்.

Tags:    

Similar News