நடை பயிற்சி சென்றவர்கள் மீது கார் மோதியது- பள்ளி மாணவன் பலி
சுரண்டை:
நெல்லை மாவட்டம் சுரண்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் வேல்சாமி மகன் அருள் (வயது 17). அம்மன் சன்னதியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன் சிவா (15), அம்பேத்கர் நகர் பால்துரை மகன் சங்கை (17). பள்ளி மாணவர்களான அருள், சிவா, சங்கை ஆகிய 3 பேரும் நண்பர்கள். இவர்கள் பங்களா சுரண்டையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இன்று காலை நண்பர்கள் சுரண்டை-சாம்பவர் வடகரை சாலையில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந் தனர். அவர்கள் ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த மாணவன் அருள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். சிவா, சங்கை ஆகியோர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, சப்-இன்ஸ் பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த மாணவர்கள் சிவா, சங்கை ஆகியோரை மீட்டு தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. பலியான அருள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சுரண்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் எது? அதனை ஓட்டி வந்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். நடை பயிற்சி சென்ற மாணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியு ள்ளது.