செய்திகள்
சீர்காழி பஸ் நிலையத்தில் பெண் வக்கீலிடம் ரூ.25 ஆயிரம் பறிப்பு- வாலிபர் கைது
சீர்காழி பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பெண் வக்கீலிடம் ரூ.25 ஆயிரம் பணத்தை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சீர்காழி:
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 28). வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். பரமேஸ்வரி நேற்று சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இவரது பின்னால் நின்றிருந்த ஒரு வாலிபர் திடீரென பரமேஸ்வரி வைத்திருந்த கைப்பையை பறித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பி சென்றார். கைப்பையில் ரூ.25 ஆயிரம் பணம் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரி சீர்காழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் புதிய பஸ் நிலையம் பின்புறத்தில் சந்தேகப் படும்படியாக நின்றிருந்த கார்த்தி (25) என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் பரமேஸ்வரியிடம் பணத்தை பறித்து சென்றவர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.