செய்திகள்

நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கட்டிட தொழிலாளி பலி

Published On 2018-09-30 20:20 IST   |   Update On 2018-09-30 20:20:00 IST
மோட்டார் சைக்கிள் விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை அடுத்த மேலகிருஷ்ணன் புதூர் ராமன் புதூரைச் சேர்ந்தவர் சிவசக்தி (வயது 38), கட்டிடத் தொழிலாளி. இவர், நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு வந்தார். மாலை வேலை முடிந்து நாகர்கோவிலில் இருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். இருளப்பபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சிவசக்தி தூக்கி வீசப்பட்டார். தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட அவருக்கு ரத்தம் கொட்டியது. ரத்த வெள்ளத்தில் சிவசக்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவசக்தியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சிவசக்தி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து பற்றி தகவல் அறிந்ததும், நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பலியான சிவசக்தியின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.

பலியான சிவசக்திக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

Tags:    

Similar News