செய்திகள்

கோவில்களில் நடைபெறும் தவறுகளை தடுக்க குழுக்கள் அமைக்க வேண்டும் - எச்.ராஜா வலியுறுத்தல்

Published On 2018-09-30 04:54 GMT   |   Update On 2018-09-30 04:54 GMT
கோவில்களில் நடைபெறும் தவறுகளை தடுக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என்று எச்.ராஜா நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #HRaja #BJP

மதுரை:

மதுரையில் பா.ஜனதா மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா 282 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா 350 தொகுதிகளில் அமோக வெற்றி பெறும். இதை யாராலும் தடுக்க முடியாது.

ராகுல்காந்தி ரபேல் விமானம் பற்றி கூறும் தகவல்களை யாரும் நம்ப வில்லை.

தமிழகத்தில் தினமும் நன்றாக பூஜை நடந்துகொண்டிருந்த கோவில்களைத்தான் இந்து சமய அறநிலையத்துறை கையில் எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களின் நிலையை அறநிலையத்துறை தெரியப்படுத்த வேண்டும்.


சென்னையில் தொழில் அதிபர் வீட்டில் 80-க்கும் மேற்பட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவில்களின் சொத்துக்கள், பழமையான பொருட்கள் பற்றிய ஆவணங்கள் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான தீர்ப்புக்கு எதிராக தேவசம்போர்டு மறு சீராய்வு மனு செய்ய உள்ளதை வரவேற்கிறேன். அதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். கோவில்களில் நடக்கும் தவறுகளை தடுக்க கோவில் வாரியாக குழுக்கள் அமைக்க வேண்டும். கோவில்களின் வருமானத்தில் 18 சதவீதத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்து சமய அறநிலையத்துறை விதி. ஆனால் கோவில்களின் முழு வருமானத்தையும் அதிகாரிகளின் சம்பளம், ஆடம்பர செலவுகளுக்காக அறந்லையத்துறை எடுத்துக் கொள்கிறது.

தமிழக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் 2600 சிலைகள் வெளிநாடுகளில் இருக்கிறது என்றும், அவை மீட்கப்படாததற்கு காரணம், கோவில் சொத்துக்களின் பதிவுகள் இல்லாததுதான் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. இந்த சிலைகளை தமிழகம் கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார். #HRaja #BJP

Tags:    

Similar News