செய்திகள்

கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தலை தடுத்த அதிகாரிகள் மீது தாக்குதல் - ஒருவர் கைது

Published On 2018-09-29 15:06 IST   |   Update On 2018-09-29 15:06:00 IST
கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தலை தடுத்த அதிகாரிகளை தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள நெய்யூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மாட்டுவண்டிகளில் மணல் திருடப்படுவதாக கிராம அதிகாரிக்கு தகவல் வந்தது.

இதையடுத்து நெய்யூர் கிராம அதிகாரி பாஸ்கர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது 6 பேர் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.

அவர்களை அதிகாரிகள் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த 6 பேரும் அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை தாசில்தார் இளங்கோவன் பெரியபாளையம் போலீசில் புகார் செய்தார்.

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் விசாரணை செய்தார். இதில் நெய்யூரை சேர்ந்த வெங்கடேசன், மணிகண்டன், முனுசாமி, அண்ணாதுரை, ராஜேஷ், பொ.வெங்கடேசன் ஆகியோர் அதிகாரிகளை தாக்கியதும், கொலை மிரட்டல் விடுத்தும் தெரிய வந்தது.

இவர்களில் வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். மற்ற 5 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மணல் கடத்தலை தடுத்த அதிகாரிகளை தாக்கிய சம்பவம் பெரியபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News