செய்திகள்

மாரடைப்பால் பலியான என்ஜினீயரிங் மாணவரின் கல்வி கடனை செலுத்திய அதிகாரிகள்

Published On 2018-09-28 10:43 GMT   |   Update On 2018-09-28 10:43 GMT
நீலகிரியில் மாரடைப்பால் இறந்த என்ஜினீயரிங் மாணவர் வங்கியில் வாங்கியிருந்த கல்வி கடனை அதிகாரிகள் செலுத்திய சம்பவம் கோர்ட்டில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
காந்தல்:

நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் மகன் பாலமுரளி. இவர் ஊட்டியில் உள்ள ஓரியண்டல் வங்கியில் ரூ.1.3 லட்சம் கல்விக் கடன் பெற்று என்ஜினீயரிங் படித்தார். கணவர் இறந்த பின்னர் தாய் மட்டுமே மகனை படிக்க வைத்தார்.

பாலமுரளி ரூ.30 ஆயிரம் மட்டுமே வங்கியில் செலுத்தியிருந்தார். இந்நிலையில் மீதி கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என்று பாலமுரளிக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பாலமுரளி திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார். இதனால் பாக்கி வங்கிக் கடனை திருப்பிச்செலுத்தாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான வடமலையின் பரிந்துரையின் பேரில் வாராக்கடன் தொடர்பான மத்தியஸ்த கூட்டம் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலர் சுரேஷ்குமார் தலைமையில் ஊட்டியில் நேற்று நடைபெற்றது.

இதில், வங்கியின் மேலாளர் பிரேம், பாலமுரளியின் வக்கீல் நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கத்தலைவருமான ஸ்ரீஹரி ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், பாலமுரளியின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, வங்கிக்கு அவர் செலுத்த வேண்டிய ரூ. 1 லட்சத்தில் 90 ஆயிரத்தை தள்ளுபடி செய்துவிடுவதாக வங்கி மேலாளர் பிரேம் அறிவித்தார்.

இருப்பினும், மீதமுள்ள 10 ஆயிரம் ரூபாயை கண்டிப்பாக கட்ட வேண்டும் என தெரிவித்ததார். இதனையடுத்து நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலர் சுரேஷ்குமார், வக்கீல் ஸ்ரீஹரி, வங்கி மேலாளர் பிரேம் ஆகிய மூவரும் சேர்ந்து பாக்கி தொகையான ரூ.10 ஆயிரத்தை செலுத்தி மாணவரையும், அவரது தாயாரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்தனர்.

இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News