ஈரோடு அருகே மண் சரிந்து விழுந்து தொழிலாளி பலி
ஈரோடு:
ஈரோடு செம்படாம்பாளையம் நசியனூர் வெள்ளக்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் வீடு கட்டி வருகிறார். இதற்காக பணியாளர்கள் இன்று வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்று அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்தது. இதில் சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்த செல்வமும் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்து செல்வம் மீது விழுந்து அவரை அமுக்கியது. இதில் இடிபாட்டில் சிக்கி செல்வம் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு ஈரோடு தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். இடிபாட்டுக்குள் சிக்கி கிடந்த செல்வம் உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்துக்கு வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் யசோதா, சாஜிதாபானு ஆகியோரும் நேரில் சென்று பார்வையிட்டு நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.